Monday, January 31, 2022

அடுத்த மாதம் நிலவில் மோதும் ராக்கெட்

அடுத்த மாதம் நிலவில் மோதும் ராக்கெட் - ஏற்படும் விளைவுகள் என்ன?
பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை ‘பால்கன்9’ ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.
செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்திவிட்டு ராக்கெட் பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனதால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது. அப்போது முதல் இந்த ராக்கெட் பூமியையும், நிலவையும் குழப்பமான முறையில் சுற்றி வருகிறது.
இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 4 டன் எடையுள்ள பூஸ்
டர், நிலவை நோக்கி மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாகவும், அது மோதும் போது நிலவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பூஸ்டர் நிலவின் பின்புறத்தில் மோத இருப்பதால் அந்த நிகழ்வை பூமியில் இருந்து பார்க்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைவிடப்பட்ட ராக்கெட் உள்ளிட்ட விண்வௌி குப்பைகள் நிலவில் மோதுவது இது முதல் முறை அல்ல என்பதால் இந்த நிகழ்வால் பெரிய அளவில் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சில விண்வெளி ஆய்வாளர்கள் நிலவில் ராக்கெட் மோதும் இந்த நிகழ்வு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று கூறுகின்றனர். அதே சமயம் இந்த நிகழ்வை ‘‘ஒரு அற்புதமான ஆராய்ச்சிக்கான வாய்ப்பு’’ என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
நன்றி - தினத்தந்தி (01,02,2022)

Wednesday, July 28, 2021

சபாஷ்.. பி.இ. படிச்ச பொண்ணு குப்பை அள்ளுது...

பி.இ. படித்த ஒரு பெண் குப்பை அள்ளுகிறார் என்ற செய்தி முதன்முறையாகக் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. 


                                                    Image courtesy : Lovepik


என்ன கொடுமை சார் இதுனு கேக்கக் தோணுதா...? பொதுவாக, நன்றாகக் படித்தவர்கள் வேலையின்மைக் கொடுமையால், கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வரும் செய்திகள் வெளியாவது வழக்கம். "உச்" கொட்டாமல் அது போன்ற செய்திகளைக் கடக்க முடியாது. உண்மையில் கொடுமைதான்.

ஆனால்...

வழக்கம்போல நடக்கக் கிளம்பினேன். அந்த நேரத்தில் எப்போதுமே தூய்மைப் பணியாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். நல்ல உடையுடன் ஒரு இளம்பெண் குப்பைகளைத் தள்ளிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதிக்கு அவர் புதியவராக இருந்தார். டீக்கடையில் வழக்கம் போல ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கதையைத்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

"இந்தப் பொண்ணு பி.இ. படிச்சுருக்கு"

இதைக் கேட்டவுடன் எனக்கு "சுருக்"கென்றது. ஆனால் அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் இருந்தது. 

2019 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பினார்கள். பி.இ. படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கிறார்கள் என்று அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதில் பலருக்கும் வேலை கிடைத்தது. பி.இ. என்பதைத் தாண்டி, கூட்டி அள்ளுவதற்கு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் முன் வருகிறார்களே என்ற உணர்வுதான் முன்வந்தது. நல்ல விஷயம்தானே..?

துப்புரவுப் பணிக்கு ஏதோ அருந்ததிய  சமூகத்தினர் நேர்ந்து விடப்பட்டது போன்றுதான் சமூகம் நடந்து கொள்கிறது. பிற சாதியினர் இந்தப் பணிக்கு வர விரும்புவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், அந்தப் பணிக்கு அனைத்துச் சாதியினரும் விண்ணப்பிக்கிறார்கள் என்ற செய்தி நன்றாகவே பட்டது. 

பணி நியமனம் பெற்ற பிறகுதான், சாதிக் கொடூரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியில் அமர்ந்த  பிற சாதியினர்  325 பேர் அலுவலகங்களில் கோப்புகளைக் கொண்டு போய்க் கொடுப்பது, தபால் பிரிப்பது, அதைக் கொண்டு போய்க் கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்தனர். துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை. பீ அள்ளுவதெல்லாம் அப்புறம். துடப்பக் கட்டையைக் கையால் கூடத் தொடவில்லை. அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்தனர். 

தொடர்ந்து புகார்கள் தரப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையரும் மாறினார். சமூக நீதிக்கட்சியின் புகார் சரியான நேரத்தில் ஆணையரின் மேஜையில் தஞ்சம் புகுந்தது. அதிரடியான உத்தரவு வெளியானது. துப்புரவுப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பப்பட வேண்டும். அலுவலகங்களில் இருந்து விடுவிக்கப்படட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துப்புரவுப் பணியைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். 

இதோ, தெருக்களில் பி.இ. படித்த பெண் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். பி.இ. படித்தவர் இந்த வேலையைச் செய்கிறார் என்பது அவலம்தான். ஆனால், சாதிப் பாரபட்சம் நீக்கப்பட்டதன் விளைவாக அவர் குப்பை அள்ள வேண்டி வந்தது, எந்த வேலைக்கு விண்ணப்பித்து, அதில் சேர்ந்தாரோ அந்த வேலையைச் செய்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. தீண்டாமையின் கொடூர வடிவங்களில் ஒன்று நீக்கப்பட்டிருக்கிறது. 

மகிழ்ச்சி...


Wednesday, July 21, 2021

அரசு வேலைக்குச் செல்ல விரும்புவோரா, நீங்கள்..?

உங்கள் பதிவுகளை, உரையாடல்களை மறுபடியும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அவையெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் இல்லை, தமிழிலும் இல்லை. ஆனால், இந்த இரண்டு மொழிகளிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தேர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

Today variya?

Today varla

அதிலும் சிலர் 2day என்றோ அல்லது 2dy என்றோ சுருக்கி விடுகிறார்கள். 


Image courtesy : Translate day

இப்படியொரு உரையாடல் வாட்ஸ் அப்பில் நடக்கிறது. இந்த இருவரும் அரசுத் தேர்வுக்கு தயாராகிறார்கள். இவர்களில் ஒருவர் தன்னால் மொழிபெயர்ப்பை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்று ஆலோசனை கேட்கிறார். நான் அவரிடம் சொன்னதே, முதலில் உங்கள் உரையாடல்களை ஏதாவது ஒரு மொழியில் செய்யுங்கள் என்றேன். நாம் எழுதும்போதோ அல்லது மொழிபெயர்க்கும்போதோ தவறுகளே கண்களுக்குப் படாமல் போய்விடும் என்று எச்சரித்தேன். 

ஆங்கிலத்தில் அனுப்பினால் தவறாகி விடலாம் என்றார். இப்போது நீங்கள் என்ன சரியாகவா அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எனது பதில் கேள்விக்கு அரண்டு போனார். உங்களை ஆங்கிலத்தில் அனுப்புங்கள் என்று நான் சொல்லவில்லையே... தமிழில் அனுப்பலாமே..? இரண்டில் ஏதாவது ஒரு மொழியில் அனுப்புங்கள் என்றுதானே சொன்னேன் என்றேன்.

சார்.. அந்த மொழிபெயர்ப்பு.. என்றவரை, அடுத்த பதிவில் அது பற்றிப் போடுகிறேன். படித்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன். 

பெரு : ஜனாதிபதியானார் இடதுசாரித் தலைவர் கேஸ்டில்லோ

 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான பெட்ரோ கேஸ்டில்லோ வெற்றி பெற்றிருக்கிறார்.



வாக்குகெடுப்பு நடந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அதிகாரபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 51 வயதாகும் தொழிற்சங்கத் தலைவரான கேஸ்டில்லோ, வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபோது கருத்துக் கணிப்புகளில் இவரும் போட்டியிடுகிறார் என்று முதலில் சொன்னார்கள். முதல் சுற்றில் முதலிடத்தை இவர் பிடித்த பிறகுதான் வேறு வழியில்லாமல் இவரைப் பற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்தன.

தேர்தல் நெருங்குகையில் பியூஜிமோரிக்கு ஆதரவாக நிலைமை மாறி விட்டது என்றெல்லாம் எழுதித் தள்ளினார்கள். குறைவான வாக்குகள் வித்தியாசம் என்றாலும், கேஸ்டில்லோ எதிர்கொண்ட நிலைமை அசாதாரணமானதாகும். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அமெரிக்க ஆதரவு, ஊடகங்களின் ஒருசார் செய்திகள், உள்ளூர் முதலாளிகளின் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு தடைகளை கேஸ்டில்லோ உடைத்தெறிந்துள்ளார்.

அதிகாரபூர்வமாக பெரு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 50.12 சதவிகித வாக்குகளை கேஸ்டில்லோ பெற்று வெற்றி  கண்டுள்ளார்.


இதுதான் சொந்தக் காசுல சூனியமோ..??

(சூனியம் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அந்த வார்த்தையை பயன்படுத்தும் சில இடங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.)

ஒரு திரைப்படத்தில் ஒரே நாள்ல பிரபலமாக என்ன வழி என்று வடிவேலு கேட்பார். அதற்கு சரத்குமார் ஒரு ஐடியா கொடுப்பார். கொலைப்பழியிலேயே வடிவேலு மாட்டிக் கொள்வார்.



இதுமாதிரி ஐடியா கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு பாஜக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆகிய நான்கு பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பாதுகாவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போதாது என்று நினைத்திருக்கின்றனர். கூடுதல் பாதுகாப்பு, கூடுதல் அந்தஸ்து என்ற திட்டத்துடன் தங்களைத் தாங்களே கடத்திக் கொள்ளத் திட்டம் போட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்பக் மீர் மற்றும் பஷிரத் அகமது ஆகிய இரு பாஜக ஊழியர்கள்தான் இவர்கள். ஒரு இரவில் தாக்குதல் நடந்தது போன்று நாடகம் நடத்தப்பட்டது. ஆனால், இவர்களின் பாதுகாவலர்கள் சுட்ட குண்டு, இஷ்பக் மீரின் கையைத் துளைத்து விட்டது.
விசாரணை நடந்ததில் தாக்குதல் ஒரு நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற நாடகங்களை பாஜகவினர் நடத்தி வந்து அம்பலமாவது தொடர் கதையாகியுள்ளது. இப்போது சிறையில் இருக்கிறார்கள். இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்குறதுன்னு சொல்வாங்களோ...
எப்படியோ, பிரபலமாயிட்டாங்க...

Saturday, July 3, 2021

உங்களுக்குத் தெரியுமா, ஸ்பீக்கர் யாருன்னு..??

நாங்க எல்லாரும்  தேர்வு எழுதிட்டு இருந்தோம்.. 

ஒரு டேபிள்ல ஆறு பேரு இருந்தோம். ஒரு வட இந்திய நண்பரும் அதுல.. பேரு மறந்துருச்சு...

ஒரு கேள்வி... கோடிட்ட இடத்தை நிரப்புக...

Lok Sabha Speaker ________. என்றிருந்தது. 

அப்போ பி.ஏ. சங்மா... ஆனா, அந்த வட இந்திய நண்பர் குறுக்கே புகுந்து "இல்லை, அஹுஜா.. " என்றார். குழம்பினோம்.. "டி.வி.ல கூட பார்த்திருக்கிறேன்" என்ற அடுத்த பதிலில் அதிர்ந்து போனோம்.. 

அது கடைல விக்குற ahuja speaker னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது..

🤪🤪🤪


வெனிசுலாவுக்கு அமெரிக்க ஆதரவுக்குரல்..

 வெனிசுலாவுக்கு எதிரான சட்ட விரோதத் தடைகளை அகற்றுங்கள் என்று அமெரிக்காவிலிருந்தே குரல் வலுவாக எழும்பியுள்ளது.

பொதுவாக, அமெரிக்கா பிற நாடுகள் மீது தடைகளை விதிக்கையில் அமெரிக்காவில் இருந்து எதிர்ப்புக் குரல் எழும்புவது வாடிக்கையானதுதான். தனிநபர்கள் அல்லது ஒற்றுமைக் குரலுக்கான அமைப்புகள் என்றுதான் அந்தக் குரல்கள் இருக்கும். 

அண்மைக்காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுக்கட்சி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறது. ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோதே தடைகளை அகற்றி விடுங்கள் என்று குரல் எழுப்பினார்கள். 

மதுரோவுடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமையன்று(02.07.2021) அக்கட்சின் உயர்மட்டக்குழு ஒன்று வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவைச் சந்தித்திருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுடன் தாங்கள் உறுதியாக நிற்போம் என்று அந்தக்குழு மதுரோவிடம் தெரித்திருக்கிறது.



கட்சியின் பின்னணி

1982 ஆம் ஆண்டில்தான் இந்தக்கட்சி துவங்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிக் குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில் இயங்குவதே இதன் நோக்கமாகும். ஜனநாயகம் மற்றும் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

2018 ஆம் ஆண்டில் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் இரண்டு இடங்களை இக்கட்சி பிடித்தது. நாட்டின் பல்வேறு மாகாண அவைகளில் 11 பேர் இக்கட்சி சார்பாக இடம் பிடித்தனர். 2020 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு பேர் பிரதிநிதிகள் சபையிலும், மாகாண அவைகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களைப் கைப்பற்றியிருக்கிறார்கள்.